அஸ்ஸிஹாபி
மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியின் 38 வது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமையன்று கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் திறந்த, உள்ளக அரங்குகளில் இரு அமர்வுகளாக இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் 'ஷரீஆ' கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 111 மாணவர்களுக்கு மௌலவிப்பட்டங்கள் வழங்கப்பட்டதோடு அல்- குர்ஆனை மனனம் செய்த 24 மாணவர்களுக்கு அல்- ஹாபிழ் பட்டங்களும் வழங்கப்பட்டன.
கல்லூரியின் பிரதம நிருவாகி அஷ்ஷய்க் எஸ்.ஏ. ஜப்பார் தலைமையில் கல்லூரி அதிபர் அஷ்ஷய்க் எம்.எம்.கரீம் நத்வியின் பங்களிப்புடன் இடம்பெற்ற இவ்விழாவில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் செயலாளர் மௌலவி ஏ.எம்.எம். முபாறக், சர்வதேச நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எஸ்.எல்.எம். நௌபர் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.யூ.பரீட் மாகாண கூட்டுறவு துறை பதிவாளரும் ஆணையாளருமான எம்.சீ.எம்.ஷரீப், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஜே.எம்.ஹுஸைன்தீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அத்தோடு கல்லூரியின் பிரதம நிருவாகி அஷ்ஷய்க் எஸ்.ஏ.ஜப்பார், கல்லூரி அதிபர் அஷ்ஷய்க் எம்.எம்.கரீம் நத்வி ஆகியோருக்கு முறையே 'ஷகுன் நத்வா', 'ஹாதிமுன் நத்வா' என்னும் சிறப்புப் பட்டங்களும் வழங்கப்பட்டன.
இதன் போது பட்டமளிப்பு விழா சிறப்பிதழ் ஒன்றும் வெளியிடப்பட்டது.








